Saturday 28 November 2009
கன்னித் தமிழ் "பன்னி" தமிழ் ஆகிவிட்டது: கவிக்கோ அப்துல் ரகுமான்
நாணத்தான் போகிறாய் புத்தா..!
அலை அலையாய் தமிழ்க் கூட்டம்
நகர்ந்தது காண்...
எரிமழையாய் ஏவுகணை ஆயுதங்கள்
இடைவிடாமல் தமிழ்ச் சிதைவே
நோக்கமென்று...
ஈழத்தில் இறங்கியது!
சிறுகுழந்தை தாய்மார்கள்
ஈழத்துக் குருவிக் கூட்டம்-
அத்தனையும் ரத்தச் சேற்றில்
ரணப்பட்டு துடித்ததய்யா!
அப்பொழுது...
'பொழுதெல்லாம் அழிவு தரும்
போரென்ற பேரவலம்
தலையிடுங்கள், தடுத்திடுங்கள்'- என
ஈழத்தில் சாக்குரல்
இங்கேயும் கூக்குரல்!
இறுமாப்பு செவிகளுடன்
'தூதர் இதோ போகிறார்
இப்போது போகிறார்' என
தமிழன் வாழ்வில் மண்ணள்ளிப்போட்டு-
மன்மோகன் வாய் மொழிந்தார்.
ஆனால் இப்பொழுது?
தமிழனை அழித்த
சிங்களச் சாத்தான்கள்
தங்களுக்குள் தாக்கிக் கொள்ள... ஐயகோ பொறுக்கவில்லை
காந்தி தேச
கசாப்பு ஆட்சி மனம்!
தமிழனின் உயிர்வலியை
தாங்கவொண்ணா வலிமொழியை
திமிர்விழியால் ரசித்த டெல்லி...
சிங்களனின் கூட்டுக்குள்ளே
சிறு உரசல் என்றவுடன்
பதறித் துடிக்குது பார்...- கொழும்புப்
பயணம் போனது பார்!
புலி வெளியே வருமென்று- உலகம்
காத்திருக்கும் வேளையிலே
தமிழன் மேல் போர்த் தொடுத்த
இந்திய பூனைக்குட்டி
இன்று வெளிவந்ததடா!
கண்டியிடம் பல் துறந்த
பொக்கை வாய் புத்தா!
காலத்தின் பற்களினால்
கயவர்கள் கடிபடுவர்...
காணத்தான் போகிறாய்- கண்மூடி
நாணத்தான் போகிறாய்!
தமிழக அரசியல் வார இதழிலிருந்து
எம் தலைவன் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறான்.
எம் தலைவன் புலியாய்,புயலாய், காற்றாய்
விரைவில் வெளியில் வருவான்.
இந்திய, சிங்கள பொய் மூட்டைகளை பஞ்சு பஞ்சாக்க…
எம் தலைவன் காற்றாய்,தீயாய் ,
பூமியில் இடியாய் இறங்குவான்.
அடேய்! பச்சைப் பொய்க் கூட்டமே!
ஈழத்தாய்களின் கண்ணீர், தாய்ப் பால், இரத்தம்,சாபம் ….
எல்லாம் ஒன்றாய் திரண்டு தான் பிரபாகரனாக மாறி இருக்கிறது.
உங்களின் தலைகளை , இலங்கை மண்ணில் உருளச் செய்யாமல் என் தலைவன் சாகமாட்டான்.
ஆம், துரோகிகளே!
நண்பர்களே!
தோழர்களர்களே!
வீரர்களே!
வெறும் வெற்றுச் சோத்துப் பண்டாரங்களே!
ஏய், உலகத் தமிழ்ச் சாதியே!
இந்த செய்தியை உலக தமிழர் வரலாற்றில் இப்போதே குறித்து வைத்துக் கொள்!
ஈழம் விடுதலை அடைந்த பிறகே எம் தலைவனின் தலை சாயும்…!
--
www.naamtamilar.org
Friday 27 November 2009
இலங்கை மீனவர்களை காப்பாற்றிய தமிழக மீனவர்கள்
இலங்கை மீனவர்கள் 2 பேர், கடல் கொந்தளிப்பால் தத்தளித்தனர். அவர்களை அந்த
பகுதியில் மீன் பிடிக்க சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த நாட்டு படகு
மீனவர்கள் காப்பாற்றினார்கள். அவர்களுக்கு தங்கள் படகில் வைத்திருந்த
உணவையும் கொடுத்து, ராமேசுவரத்துக்கு படகுடன் கொண்டு வந்தனர்.
பின்னர் இலங்கை மீனவர்கள், இந்திய கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் அவர்களது பெயர்கள் மரியன் பிரதீப் (வயது29), ஆல்பர்ட் சலீமா
(31) என்று தெரிய வந்தது. அவர்கள் இலங்கையில் உள்ள பேசாலை என்ற இடத்தை
சேர்ந்தவர்கள். கடலில் எரிபொருள் தீர்ந்து விட்டதால், கடல் கொந்தளிப்பில்
சிக்கி 3 நாட்களாக நடுக்கடலில் தவித்ததாக, இலங்கை மீனவர்கள்
தெரிவித்தனர். பின்னர் இலங்கை மீனவர்கள் 2 பேரும், ராமேசுவரம் போலீஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20514
============
இதைப் பார்த்தாவது ஒவ்வொரு சிங்களவனும், புத்த பிக்குகளும், சிங்கள
கொலைக்கார ராணுவத்தினரும், முதுகெலும்பே இல்லாத இந்திய அதிகார
வர்க்கத்தினரும், உலக பதறுகளும் வெட்கித்தலைகுனியவேண்டும்...
முத்தமிழ்வேந்தன்
சென்னை
Wednesday 25 November 2009
சொன்னால் முடியாத சரித்திரமாக... என்னால் முடியும் கேணல் சார்ள்ஸ் -ச.பொட்டு-
--
த.தேவா
புலி எதிர்ப்பு - முதலீடில்லா லாபம்
2004- டிசம்பரில் சுனாமி வந்தது. தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு பிணமானார்கள். அந்த இயற்கை அனர்த்தம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில் அதன் பிறகு தமிழக கடலோராங்களை ஆழிப்பேரலைகள் தாக்கவில்லை; மக்களை அடித்துச் செல்லவும் இல்லை. ஆனால் ஓவ்வொரு மாதமும் வதந்தி வருகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதறியடித்து மக்கள் ஓடுகிறார்கள். வதந்திகள் அவர்களை கடலோரங்களை விட்டு துரத்துகிறது. இவை வதந்தி என்று மக்களால் ஓடாமல் இருக்கவா முடியும் அல்லது இன்னொரு ஆழிப்பேரலை வராது, அது வெறும் வதந்திதான் என்று நாம் உத்திரவாதம் தான் கொடுக்க முடியுமா?
வன்னி மீதான போர் தீவிரப்படுத்தப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய அரசின் துணையோடு இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த மார்ச் மாதவாக்கில் நண்பர்கள் ஒரு மெயிலை எல்லோருக்கும் தட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். புலி எதிர்ப்பாளர்கள், சி.பி.எம் கட்சியைச் சார்ந்த தோழர்கள் இந்த மெயில்களை பெரும் கொண்டாட்டத்தோடு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனுப்பிய அந்த மெயில் அப்படியே எனக்கும் ஃபார்வேர்ட் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் இராணுவ, அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட அந்த கோப்பை அப்படியே பி.டி.எப்ஃ, எம்.எம்.எஸ் பைலாக மாற்றி (இதை ஏன் சொல்கிறேன் என்றால் மெயிலைத் திறந்த உடன் அது நம் கணிப்பொறி திரையில் ஒரு மினி சினிமா மாதிரி வந்து வந்து மறையும்) அனுப்பியிருந்தார்கள். அந்த புகைப்படத் தொகுப்பு நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்.
பிரபாகரன் அவரது உறவுகளோடு அமர்ந்து உண்டு கொண்டிருப்பார். ஈழக் குழந்தைகளோ கையில் தட்டேந்தி உணவுக்காக நின்று கொண்டிருக்கும். (அதவாது பிரபாகரன் உணவருந்துகிற படம் பழையது. குழந்தை தட்டோடு நிற்பது இறுதிப் போரின் போது எடுக்கப்பட்டது) பிரபாகரன் நீச்சல் குளத்தில் அவரது மகனோடு நிற்பார். ஈழக் குழந்தைகளோ அம்மணக் குண்டிகளாய் குளத்தில் குளிக்கிறார்கள். துவாரகா பட்டம் பெறுகிற மாதிரி ஒரு படம், ஈழத்து மாணவிகளோ கையில் துப்பாக்கியோடு நிற்கிற படங்கள். இப்படியான ஒரு மெயில் பலரது மனதையும் மனக்கிலேசத்துக்கு ஆளாக்கியிருக்கக் கூடும். புலிகளின் அழிவைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் இந்த மெயிலைக் கொண்டாடியும் புலிகளைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் வேதனைப்பட்டும் இது குறித்து பேசிக் கொண்டார்கள். நான் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மொபைலில் வருகிற எஸ்,எம்.எஸ்களே ஒரு கட்டுரையைத் தீர்மானிக்கும் என்றால் நாம் ஏன் இது குறித்து எழுதக் கூடாது என்றுதான் இப்போது இதை எழுதுகிறேன்.
பிரபாகரன் குளித்த நீச்சல் குளம் சென்னை பாண்டிபஜாரில் பிளாட்பார்ம் கடையில் ரூபாய் நூற்றி ஐம்பது ரூபாயில் தொடங்கிக் கிடைக்கிறது. ஆயிரம் ரூபாய் செலவு செய்கிற திராணி உங்களுக்கு இருந்தால் ஒரு மினி நீச்சல் குளத்தை நம் வீட்டுக்குள்ளேயே அமைத்துக் கொள்ளலாம். சொந்த வீடு இல்லாதவர்கள் கள்ளத்தனமாக வீட்டு உரிமையாளர் ஊரில் இல்லாத போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் என் குழந்தைக்கு ஒரு சின்ன நீச்சல் குளம் வாங்கியிருக்கிறேன். அதாவது நமது எதிர்கருத்து நண்பர்களின் அளவுகோலின்படி நான் பிரபாகரனுக்கு நிகரான ஒரு ஆடம்பரவாதி (பிரபாகரனின் மகள் துவாரகா மாலதி படையணியில் போரிட்டு களத்தில் மடிந்த பெண் போராளி என்பது உபரியான தகவல். தவிரவும் சார்ல்ஸ் ஆண்டனி ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் முடித்தவர், துவாரகா டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதெல்லாம் நமது ஊடகங்களின் கட்டுக்கதை.) சரி பிரபாகரனை ஆடம்பரவாதியாக சித்தரித்து இவர்கள் அனுப்பியது போன்ற ஒரு மெயிலையோ புகைப்படத் தொகுப்பையோ உலகின் வேறு எந்த தலைவருக்குமே உருவாக்க முடியாதா, என்ன? பிடல் காஸ்ட்ரோவுக்கோ, ஜோதிபாசுவுக்கோ, காந்திக்கோ உருவாக்கி விட முடியாதா? ஜோதிபாசு காரில் போவது போன்று ஒரு படம், ஏழைப்பாட்டாளி ஒருவர் பொட்டல்வெளியில் செருப்பில்லாமல் நடந்து போவது போன்று ஓரு படம்; அவருக்கு நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் மெத்தப்படித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போன்று ஒரு படம்; ஏழைத் தொழிலாளி முறையான சிகிச்சையின்றி இறந்தது மாதிரியான ஒரு படம்; அனுப்ப முடியாதா என்ன?
போர்க்காலத்தில் இன்னும் என்னென்ன வதந்திகளை எல்லாம் இவர்கள் பரப்பினார்கள்? ‘பிரபாகரன் போர்ப் பகுதியில் இல்லை; மக்களை பலிகடவாக்கி விட்டு அவர் தூர தேசத்துக்கு தப்பி விட்டார்’’ என்றார்கள். அதுவும் பொய்யென்று ஆன பிறகு இப்போது சொல்கிறார்கள், “புலிகள் மக்களை மணல் மூட்டைகளாக்கி விட்டார்கள். மக்களைக் கொன்றது அவர்கள்தான்”. அதற்காக வாக்குமூலங்களை உருவாக்கும் முயற்சிகளில் இருக்கிறார்கள். இப்படி எத்தனையோ வதந்திகள்!! எல்லாவற்றையும் வதந்திகள் என்று விட்டு முடியுமா அல்லது புலிகள் பற்றிச் சொல்லப்படுகிற கதைகளில் ஒரு பாதி உண்மை என்று என்று எடுத்துக் கொள்வதா என்கிற தேடுதல் கூட இல்லாமல் - படுகொலை நிகழ்த்திய பௌத்த சிங்களப் பேரினவாத அரசு குறித்து மௌனம் சாதித்து விட்டு, நாம் இனப்படுகொலைக்காக பேசும்போதெல்லாம் இவர்கள் புலிப்பாசிசம் என்றும் வன்னிப் புலிகள் என்றும் இனப்படுகொலைக்காக ஒலிக்கும் குரல்களை பலவீனப்படுத்துகிறார்கள். வதந்திகள் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எல்லாமே வதந்திகள் என்று ஒதுக்குவதன் மூலம் நாம் ஒதுக்கித் தள்ள நினைப்பது தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும்தான். நல்ல காலம் அதை தமிழகத்தில் யாரும் வெளியிடவில்லை. தமிழகத்தில் அது வெளியிடப்பட்டிருந்தால் புலிப் பிரச்சாரம் என்று முத்திரை குத்தியிருப்பார்கள்.
நான் பெரிதும் மதிக்கக் கூடிய பேராசிரியர் அ.மார்க்ஸ் ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும் என்று ஒரு கட்டுரையை புதுவிசை இதழில் எழுதியிருந்ததையிட்டுதான் என் கருத்தை நான் பதிவு செய்ய நேர்ந்தது. எஸ்.எம்.எஸ். வதந்திகள் குறித்து எழுதியதில் இந்திய வீரர்கள் ஈழ மக்களைக் கொல்கிறார்கள்; இராணுவ மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதெல்லாம் வதந்திகள் என்று சொல்கிறார் மார்க்ஸ். உண்மையில் இதெல்லாம் வதந்திகள் மட்டும்தானா? இந்திய வீரர்கள் ஈழத் தமிழர்களைக் கொன்றதில்லையா? ஆயுதங்களும் படைகளும் அனுப்பவில்லையா? சார்க் மாநாட்டுக்கு இந்தியத் தலைவர்கள் சென்றபோது இந்திய இராணுவம் கொழும்பு நகரத்தையே தங்களின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லையா? புலிகளின் ஆயுதக் கப்பல்களை வழிமறித்து இந்தியக் கடற்படை தாக்கியழிக்கவில்லையா? தமிழகம் வழியாக இராணுவ டாங்கிகளும், வெடிப்பொருட்களும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த இந்தியா அனுப்பவில்லையா? அவைகள் மதுரை செக்போஸ்டில் சிக்கி இந்திய அழுத்தம் காரணமாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படவில்லையா? ஈரோடு வழியாக சரக்கு ரயில்களில் டாங்கிகள் கொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கொழும்பு செல்லவில்லையா?
இப்படி எவ்வளவோ கேட்க முடியும். எல்லாமே வதந்திகளல்ல. எல்லாமே உண்மைகளும் அல்ல. எளிய மக்களின் உணர்ச்சிப் பெருக்கில் உண்மையும் பொய்யும் கலந்தே கதைகள் உலவுகின்றன. அதிலுள்ள ஒரு பொய்யை எடுத்து அல்லது சில பொய்களை எடுத்து பல நூறு உண்மைகளை வதந்திகள் என்று நிறுவ முயல்வது ஏன்? இப்போது வெளிவந்திருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும் வதந்தி என்று கழித்துக் கட்ட நினைப்பதன் அரசியல் சிந்தனை என்ன? (தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வீடீயோ ஆதாரங்களை சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதர் போலியானது (வதந்தி) என்றிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் புலி எதிர்ப்பின் பெயரால் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் பெரும்பலானவர்களும் இந்த வீடீயோவை அப்படியே உல்டாவாக்கி கொல்வது புலிகள் என்றும் கொல்லப்படுவது தமிழ் மக்கள் என்றும் மாற்றிப் பேசுகிறார்கள்)
மற்றபடி மார்க்ஸ் இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கும் தமிழக எழுத்தாளர்கள் குறித்த எபிசோட் ஒரு காமெடி பீஸ்தான். இந்த காமெடி பீஸை “யார் மனமும் புண்படாமல் போராடிய” கவிஞர்களின் ஒப்பாரிப் போராட்டத்தில் இருந்து நாம் கண்டு வருகிறோம். மற்றபடி ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர அஞ்சி நடுங்கி சந்தர்ப்பவாத அரசியலுக்குள் வாழும் பிழைக்கத் தெரிந்த மனிதர்கள்தான் இந்த தமிழ் எழுத்தாளர்கள் என்பதைத் தாண்டி இவர்கள் மீது என்ன கருத்துச் சொல்ல முடியும்? ஈழம் குறித்து ஆதரித்தோ எதிர்த்தோ எழுதாத சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலைகள் குறித்துப் பேசுகிற நம்மைப் பார்த்து 'படுகொலைகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்' என்கிறார்கள்.
ஐம்பதாயிரத்துக்கும் மேலதிகமாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு, முகாம்களில் இன்றும் கடத்திக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்காக நியாயம் கேட்டால் படுகொலைகளைக் கொண்டாடாதீர்கள் என்று நம்மை கொலைகளைக் கொண்டாடுபவர்களாக சித்தரிக்கிறார்கள். இலங்கையின் பௌத்த மரபை பாசிசம் என்றால் அது அம்பேத்கருக்கு செய்கிற துரோகம் என்று அடுத்த அஸ்திரத்தை வீசுகிறார்கள். இலங்கையிலும், பர்மாவிலும் கடைபிடிக்கப்படுகிற பௌத்த தேரவாத மரபு பௌத்தத்தின் இறுக்கமான பாசிசத் தூய்மைத் தன்மை கொண்டது என்று நமது பௌத்த நண்பர்கள் சொல்கிறார்கள். இது குறித்து தனியே எழுத விரும்புவதால் இதில் இத்தோடு விடுவோம்.
பரவிக்கிடக்கும் சமணக்காட்டை அழிக்க எட்டாயிரம் சமணர்களை உயிரோடு கழுவேற்றினார்கள் சைவர்கள் அல்லது பார்ப்பனர்கள். வரலாறு அதை பதிவு செய்திருக்கிறது. பதிவு செய்து நியாயம் கேட்டவன் அந்த எட்டாயிரம் படுகொலைகளை கொண்டாடவா செய்தான் அல்லது அம்பேத்கர்தான் இனப்படுகொலை செய்யச் சொன்னாரா? பாசிசத்தை எவன் செய்தால் என்ன அது உலகு தழுவிய இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கிறிஸ்தவ பாசிசமாக இருந்தால் என்ன? பார்ப்பன இந்து மத வெறிப்பாசிசமாக இருந்தால் என்ன? தலிபான்களின் அடிப்படைவாத பாசிசமாக இருந்தால் என்ன? தேரவாத பௌத்த பாசிசமாக இருந்தால் என்ன? பாசிசத்தை அதன் பேரில் அழைத்து விட்டுப் போக வேண்டியதுதனே?
சுசீந்திரன், ஷோபாசக்தி, ஆதவன் தீட்சண்யா, சுகன் ஆகியோரைத் தொடர்ந்து மார்க்சின் இந்தக் கட்டுரையும் இங்குள்ள புலி ஆதரவாளர்களோடு ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் ஒன்றாக இணைத்து எல்லோருக்கும் ஒரே புலி முத்திரை குத்தி முடக்கும் கட்டுரைதான். இங்குள்ள புலிஆதரவாளர்களைச் சாடுகிற நோக்கில் போகிற போக்கில் அகிலன் கதிர்காமரை இடதுசாரி பாரம்பரியம் உள்ளவராக சித்தரிக்கிறார். சுசீந்திரன், சுகன், ஷோபாசக்தியை ‘புலிகளை விமர்சிக்கிறவர்கள்’ என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார். நான் சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கி விட்டதாக எழுதியதாக பதிவு செய்கிறார். நாகார்ஜூனனும், வளர்மதியும் புலிகளை ஆதரித்தார்களோ இல்லையோ நான் புலிகளை ஆதரித்தேன். ஆதரித்து விட்டு இன்றைக்கு இல்லை அய்யய்யோ எனக்குத் தெரியாதே என்று ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பலியாகியிருக்கிறான். எனக்கு அந்தத் தேவைகள் இல்லை. சகோதரப் படுகொலைகள், ஜனநாயக மறுப்பு, ஒழுக்கக் கொலைகள், அரசியல் அற்ற தன்மை என்று புலிகள் செய்த எல்லா தவறுகள் மீதும் விமர்சனம் கொண்டே நான் ஆதரித்து வந்திருக்கிறேன். மற்றபடி மூன்று லட்சம் சிவிலியன்களை அவர்கள் பிணையக் கைதிகளாக்கினார்கள், மக்களை மணல் மூடைகளாக்கினார்கள் என்பதெல்லாம் எஸ்.,எம்.எஸ் வதந்திகளைப் போல பாதி வதந்திகள்தான். இது குறித்து வாக்குமூலம் என்கிற போர்க்கால வாக்குமூலங்களை பதிவு செய்து நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது வரும் போது ஈழத்தில் என்ன நடந்தது என்பது வெளிப்படும் என்பதால் அது குறித்தும் பேசுவதைத் தவிர்க்கிறேன்.
மற்றபடி இலங்கை அரசிடம் பணம் வாங்கியது தொடர்பாக நான் கூசாமல் சொன்ன குற்றச்சாட்டு குறித்து,
அகிலன் கதிர்காமரை இடது சாரி பாரம்பரியம் உள்ளவராக பேரா.அ.மார்க்சுக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிந்து சந்தர்ப்பவாத அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்த அகிலன் கதிர்காமர் இன்று ஒரு என்.ஜீ.ஓ. ஆகவே அவர் மனித உரிமை சக்திகளுடன் தொடர்பில் இருப்பது ஆச்சரியம் தரும் செய்தியல்ல. சிறிலங்கா டெமாக்கரெட்டிக் பாரம் என்னும் தன்னார்வக்குழுவை கனடாவை மையமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறார் அகிலன் கதிர்காமர். சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கினார் என்பது ஒரு குற்றச்சாட்டு. மார்க்சுக்குத் தெரியும் என நினைக்கிறேன். போருக்குப் பிந்தைய இலங்கை அரசின் நிதி இரண்டு விஷயங்களுக்காக அதிகமாக செலவிடப்படுகிறது. ஒன்று இராணுவத்துக்கு இன்னொன்று புலத்திலும், தமிழகத்திலும் நிலவும் புலி ஆதரவை சிதைக்கும் ராஜதந்திர நடவடிக்கைக்கு. இதற்காக அவர்கள் தன்னார்வக் குழுக்களையே சார்ந்திருக்கிறார்கள். அதாவது ஒரு பக்கம் முகாம்களுக்குள் தன்னார்வக்குழுக்களை அனுமதிக்காமல் தடுத்து விட்டு இலங்கைக்கு வெளியே தன்னார்வக் குழுக்களை வைத்து ஈழம், புலி ஆதரவு, எதிர்ப்பியங்களை நசுக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறது இலங்கை அரசு.
அந்த வகையில்தான் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஜெர்மன் சுசீந்திரனால் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கு நிதி உதவி செய்தது ஒரு தன்னார்வக்குழு. இந்த தன்னார்வக் குழுவின் நிதி வாசல் இலங்கை அரசு. சுமார் அறுபது லட்சம் ரூபாய் இந்தக் கருத்தரங்கிற்காக செலவிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து இந்த கருத்தரங்கிற்கு சிலர் சென்று வந்திருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மார்க்ஸின் நண்பர்களான சுசீந்திரன், இடதுசாரிகள் என்றும் பெண்ணியவாதிகள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்னும் ராஜேஸ்பாலா, நோயல் நடேசன் போன்றோர் இலங்கை அரசின் பணத்தில் இங்கு வந்து சென்றார்கள். இந்தக் கருத்தரங்கு திருவனந்தபுரத்தில் நடந்தபோது ஷோபாசக்தி சென்னையில் இருந்தார். அவர் சென்று வந்தாரா என்பது நமக்குத் தெரியாது.
தவிரவும் இலங்கையின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் துறைதான் அகதிகள் மறுவாழ்வு, புனர்வாழ்வு போன்ற பணிகளில் சிலதைச் செய்கிறது. இந்த அமைச்சகத்திற்கு தமிழகத்திலிருந்தே 70% பொருட்கள் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்படுகின்றன. அப்படியான ஏஜென்சிகளை நடத்துகிறவர்கள் யார் என்று உங்களுக்கு (மார்க்சுக்குத்) தெரியுமா? அப்படித் தெரியாவிட்டால் (உங்கள் நண்பர்களிடம் யாரிடம் கேட்டாலும் தெரியும்) கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்ல வருவது இதுதான். இன்றைய தேதியில் புலி எதிர்ப்பு என்பது முதலீடில்லா வருமானம் ஈட்டக் கூடியது. நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதாயங்கள் கிடைக்கும் சூழல் இருக்கிறது. குரூப் நிதிகள், தனிநபர் நிதிகள் என தேவைக்கு ஏற்ற மாதிரி பரிமாறப்படுகிறது. உண்மையில் நீங்கள் இதை கண்டிக்க வேண்டும் என நினைத்திருந்தால் சுகன் பாடிய தேசிய கீதம் குறித்து கருத்துச் சொல்லியிருக்க வேண்டும், சுசீந்திரனின் புது விசை நேர்காணல் குறித்தும், அகிலன் கதிர்காமர் குறித்தும் உங்கள் நண்பர்களிடம் அல்ல வேறு ஆட்களிடம் விசாரித்து எழுதியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை திட்டி விட்டு அதோடு சேர்த்து எலலாவற்றையும் ஊத்தி மூடுவது நியாயம் ஆகாது. இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துவது சிரமமான காரியமா என்ன? நானும் எழுதியிருக்கிறேன்.
Noel Nadesan (Australia)
Dr.Rajasingham Narendran (Middle East)
Mrs. Rajeswari Balasubramaniam (U.K)
Manoranjan Selliah (Canada)
Rajaratnam Sivanathan (Australia)
இவர்கள் எல்லாம் தன்னார்வக்குழுவினர்தான். இலங்கை அரசிற்கும் புலத்தில் உள்ள தமிழர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் பணி செய்வதுதான் இவர்களின் நோக்கம். அதற்காக இவர்கள் புலத்தில் ஈழம் என்கிற கருத்தை கைவிடச் சொல்கிறார்கள். இலங்கை அரசிடமோ கோடி கோடியாக நிதிகளைப் பெற்று செயல்படுகிறார்கள். இது தொடர்பாக ‘லிட்டில் எய்ட்’ என்ற நிறுவனத்தை இவர்கள் துவக்கியிருக்கிறார்கள். நண்பர்கள் முடிந்தால் Recent visit to sri lanka: summary report by tamil expats என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=59396. இவர்கள் எந்த அளவுக்கு புலிகளை விட கீழ்த்தரமானவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோவையும் முடிந்தால் பாருங்கள். http://littleaid.org.uk/little-aid-ambepusse-project-latest-video. எண்ணிப் பார்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ள மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்து உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. அந்த முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார்களாம் இந்த தன்னார்வக்குழுவினர். துள்ளாத மனமும் துள்ளும் என்னும் இயக்குநர் எழில் அவர்களின் திரைப்படத்தில் உள்ள ‘‘தொடு தொடு எனவே வானவில் என்னை’’ என்கிற பாடலைத்தான் அந்த சிறுவ சிறுமிகள் பாடுகிறார்கள் என்பதை நாம் சிரமப்பட்டே புரிந்து கொள்ள முடியும். காரணம் துரோகக் குழுக்களுள் உள்ள சில இளைஞர்களை வைத்து அந்த சிறுவர்களை மனரீதியாக அச்சுறுத்தி இந்தப் பாடல் பாடப்படுவதை நீங்கள் சூழ நிலவும் இராணுவச் சீருடைகளைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். தற்போது, கைதட்டச் சொன்னால் கைதட்டும் பிணங்கள்தான் வன்னி மக்கள். பாடச் சொன்னால் பாடுகிறார்கள். இது சலிப்பைப் போக்கிக் கொள்வதற்கான வழி என்கிறார்கள் இந்த தன்னார்வக்குழுக்கள்.
இந்த தன்னார்வக்குழுக்கள் முகாம்களுக்குச் சென்று வந்து ‘‘மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயமானதே’’ என்று கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இதோ அந்தக் கேவலத்தை நீங்களும் கொஞ்சம் படியுங்கள். http://inioru.com/?p=4837&cpage=1#comment-2454
கிழக்கு முஸ்லீம்கள்
புலிகள் முஸ்லீம்களை துரத்தி விட்டதிலிருந்து துவங்கிறது தமிழர் இஸ்லாமியர் வேறுபாடு. இந்த மன வேறுபாட்டை ஊட்டி வளர்த்தது இலங்கை அரசு. புலிகளால் துரத்தப்பட்ட இஸ்லாமியர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் வாழ்வதற்கான உரிமையை இலங்கை இராணுவம் மறுத்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளேயே இருக்கிறது. அது போல கிழக்கு தன்னார்வக்குழுக்களின் இறுகிய பிடிக்குள் சிக்கியிருக்கிறது. எதிர்ப்பியக்கங்களற்ற இஸ்லாமிய சந்தர்ப்பவாத தலைமை இலங்கை அரசோடு அதிகாரத்தைப் பகிர்ந்திருக்கிறது. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு தமிழர் அரசியல் பலவீனமடைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்களின் குரல் வலுப்பெறுகிற சூழலை இலங்கையில் இன்று நாம் காண்கிறோம். இது நல்ல விஷயம்தான். ஆனால் இஸ்லாமியத் தலைமைகள் இலங்கை அரசோடு சேர்ந்தியங்குவதன் மூலம் கிழக்கு முஸ்லீம்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள். இப்போதே கிழக்கில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கருணாவை வைத்து துவங்கிவிட்டது சிங்கள அரசு. தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய இஸ்லாமியத் தலைவர்களும், சில சிந்தனையாளர்களும் மிகவும் நாசூக்காக ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அது ஒட்டு மொத்த இலங்கையில் சிங்களர்களுக்கு அடுத்தபடியான பெரும்பான்மை இனம் முஸ்லீம்கள்தான் என்று.
யுத்தம், இடப்பெயர்வு, படுகொலைகள் என தமிழினத்தின் எண்ணிக்கை குறைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்கள் தமிழர்களை விட பெரும்பான்மையாகி விட்டார்கள் என்பதுதான் இவர்கள் தற்காலத்தில் வைக்கும் சிந்தனை. காஷ்மீரிலும், மத்தியக் கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் வதைபடும் இஸ்லாமிய மக்கள் மீது ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் தனித்த அக்கறையும் ஆதரவும் எனக்கு உண்டு. இஸ்லாமிய மக்களின் உள்ளூர் எதிரியான இந்துப் பாசிசத்தை எதிர்ப்பதோடு உலக அளவிலான கிறிஸ்தவ பயங்கரவாதத்தையும் நான் எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். மக்கள் படுகொலைகளை ஒரு நல்வாய்ப்பாக யார் பயன்படுத்தினாலும் அது தவறு. மரபுகளும், பெரும்பான்மை வாதங்களும் தகர்க்கப்பட வேண்டும். அது இந்து, இஸ்லாமிய, தமிழன் என எதன் பெயரில் வந்தாலும் வன்முறையே. அந்த வகையில் கிழக்கு முஸ்லீம்களின் பிரச்சனைகள் பிரத்தியேகமாக அணுகப்பட வேண்டியவை. சைவத்தாலும், வைணத்தாலும் கறைபட்ட தமிழ் தேசியம் இன்னும் மீச்சம் மீதியிருப்பதில் ஏதேனும் செய்ய விரும்பினால் சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும் உள்ளடக்கிய அரசியல் செயல்படாகாவே அது இருக்க வேண்டும். மற்றபடி தன்னார்வக்குழுக்களில் பணி செய்யும் நண்பர்கள் தங்களின் நிதி அரசியலுக்காக வடக்கு, கிழக்கு முரணை கூர்மையடைய வைப்பது வேதனையளிக்கிறது.
பொதுவாக நியாயமான விமர்சனங்களை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதினால் உடனே இவன் மார்க்சை துரோகி என்கிறான். அவர் என்.ஜி.ஓக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பேசுவதாக எழுதுகிறான் என இதையும் திரித்து கதை கட்டாதீர்கள். என்னளவில் மார்க்சின் மனித உரிமைச் செயல்படுகளின் மீது நான் மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறேன். புலிகளை எதிர்ப்பதாலேயே ஒருவர் ஜனநாயகவாதியாகி ஆகிவிட முடியாது. ஜனநாயகம் என்பது மக்களின் உண்மையான விடுதலை பற்றிப் பேசுவதுதான் என்கிற அளவில்தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். ஏனென்றால் இவர்கள் “வெறுப்புக்கு எதிராகப் பேச” இந்து ‘ராமை’ப் பயன்படுத்துவார்கள். தமிழ் தேசியவாதிகளையும், ஈழ ஆதரவாளர்களையும் திட்ட மார்க்சைப் பயன்படுத்துவார்கள்.
பேராசிரியர் அ.மார்க்ஸ் இங்குள்ள ஈழ ஆதரவளர்கள் குறித்த புரிதல் இல்லாமல் இக்கட்டுரையை எழுதியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் புலிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகாலப் போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.
அது போல ஈழம் சாத்தியமில்லை என்பதோ ஈழம் என்கிற கருத்து முடிந்து விட்டது என்பதையோ நான் நம்பவில்லை. கடந்த காலத் தவறுகளில் இருந்து புதிய இயக்கங்களை ஈழ மக்கள் கண்டடைவதன் மூலம் பேரினவாதிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்குப் பதிலாக தன்னார்வக் குழுக்களை ஈழத்திற்குள் அனுமதித்தால் இப்போதல்ல எப்போதுமே ஈழத் தமிழர்கள் எழுந்திருக்க முடியாது. அவர்கள் எழ வேண்டும் என்பதே என் ஆசை. ஏனென்றால் பௌத்த பாசிச இலங்கை அரசின் நிலப்பரப்பினுள் சிங்கள மக்களோடு தமிழ் மக்கள் சேர்ந்துவாழும் சாத்தியங்கள் இல்லை. சுதந்திரத் தமிழீழம் ஒன்றே தீர்வு அல்லது பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை என்போம் அதை.
கடைசியாக,
கீற்று குறித்த கட்டுரையில் மார்க்ஸ் இப்படியான ஒரு வாக்கியத்தை புது விசை கட்டுரையில் பயன்படுத்துகிறார். “இவர்கள் பிற பொதுப் பிரச்சனைகளில் பொதுமக்களின் பொது அறிவு மட்டத்தைக் கூட எட்ட மாட்டார்கள். இவர்கள் நடத்துகிற இணையத்தளங்களில் எந்தவித அபத்தத்தையும் யார் வேண்டுமானாலும் எழுதலாம்’’ என்கிறார். அகிலன் கதிர்காமர் மாதிரியான இடது சாரி பாரம்பரியம் அன்றி, கருவாட்டுக்கூடை தலையில் தூக்கிச் சுமந்து முதல் தலைமுறையாக வெளியில் வந்திருக்கும் முதல் தலைமுறை எங்களுடையது. உண்மையிலேயே மரபுகளின் வன்முறை குறித்து நான் மார்க்சிடம் இருந்தே கற்றுக் கொண்டேன். இந்த வரிகள் அவரிடமிருந்து வந்ததாக நான் நினைக்கவில்லை.
- டி.அருள் எழிலன் ( darulezhilan@gmail.com )
Friday 22 May 2009
பிரபாகரன் மனைவி, மகள் மரணம் அடையவில்லை; பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: இலங்கை இராணுவம் அறிவிப்பு
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, 2-வது மகன் பாலச்சந்திரன் ஆகிய மூவரும் இங்கிலாந்தில் பாதுகாப்புடன் உள்ளனர். ஆனால் இவர்கள் மூவரும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக அதிகார பூர்வமற்ற ஒரு தகவல் கடந்த புதன்கிழமை வெளியானது.
பிரபாகரன் உடல் கிடந்த நந்திக்கடல் கழிமுக பகுதியில் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டதாக இராணுவத்தின் 56-வது படையணி கூறியது.
பிரபாகரன் உடல் கிடந்த இடத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் அந்த உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது சிங்கள இராணுவத்தின் ஏமாற்று வேலை என்று உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
பிரபாகரன் உடல் கிடந்ததாக கூறப்படும் நந்திக்கடல் பகுதியில் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு எப்படி மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் உடல்கள் அன்றைய தினம் கிடைக்காமல் போனது என்ற கேள்வி எழுந்தது.
இதையடுத்து பிரபாகரன் மனைவி குறித்து வெளியிடப்பட்ட தகவல் தவறானது என்று சிங்கள இராணுவம் ஒத்துக்கொண்டது.
இது தொடர்பாக சிங்கள இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா கொழும்பில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் மரணம் அடைந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர்களது உடல்கள் எதையும் இராணுவம் மீட்கவில்லை.
இராணுவத்திடம் 4 ஆயிரம் விடுதலைப்புலிகள் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
நடேசன், புலித்தேவன் இருவரும் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த போது சுட்டுக் கொல்லப்படவில்லை. இராணுவத்துடன் சண்டையிட்ட அவர்கள் இறந்தனர்.
கடைசி நாள் போரில் இராணுவமும் பலத்த உயிரிழப்பை சந்தித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். எத்தனை ஆயிரம் சிங்கள வீரர்கள் பலியானார்கள் என்று கேட்டதற்கு உதய நாணயகாரா பதில் அளிக்க மறுத்து விட்டார்.
சிங்கள இராணுவத்துக்கு 40 ஆயிரம் வீரர்கள் தேவை என்று அரசு சார்பில் கடந்த 2 நாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது, முல்லைத்தீவு சண்டையில் பல்லாயிரக்கணக்கில் வீரர்களை சிங்கள இராணுவம் இழந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
முல்லைத்தீவு நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: சிங்கள இராணுவம் சொல்கிறது
இலங்கை முல்லைத்தீவில் உள்ள நந்திக் கடல் பகுதியில் நடந்த சண்டையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாக இராணுவம் அறிவித்தது.
பிரபாகரன் உடலை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு துரோகம் செய்து, அமைச்சர் பதவி பெற்றுள்ள கருணாவை அழைத்து வந்து அடையாளம் காண வைத்தனர்.
கருணாவும் அந்த உடலை பார்த்து விட்டு இது பிரபாகரன் உடல்தான் என்றார்.
ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் உறுதியுடன் தகவல் வெளியிட்டனர். பிரபாகரன் எப்படி தப்பிச்சென்றார் என்ற முழு விபரமும் நேற்று வெளியானது. இதனால் பிரபாகரன் தொடர்பாக மர்மம் நீடிக்கிறது.
இந்த நிலையில் பிரபாகரன் உடலை எரித்து விட்டோம் என்று சிங்கள இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரபாகரன் உடலை இராணுவம் கைப்பற்றியது. அந்த உடம்பில் இருந்து பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துள்ளோம். இது பிரபாகரன் உடல்தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
இனி பிரபாகரன் உடல் தொடர்பாக எந்த டி.என்.ஏ. சோதனையும் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம். அவரது உடல் மீட்கப்பட்ட நந்திக்கடல் பகுதியிலேயே இந்த தகனம் புதன்கிழமை நடந்தது.
பிரபாகரன் உடலுடன் அவரது சகாக்களின் உடல்களும் முழுமையாக எரிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிரபாகரனும் அவரது சகாக்களும் தப்பிச் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.
பிரபாகரன் உடலை எங்கள் டி.வி.குழுவினர் படம் பிடித்துள்ளனர். கருணாவும், தயா மாஸ்டரும் உறுதி செய்துள்ளனர். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
இவ்வாறு பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.
Wednesday 20 May 2009
சாட்சியில்லா யுத்தத்தில் கொல்லப்பட்ட பல ஆயிரக்கண மக்களின் உடல்களை தடையமின்றி அழிக்கும் முயற்சிகள் ஆரம்பம்? உடன் விரைந்து செயற்பட வேண்டுகோள்
குறிப்பாக கடந்த இறுதுக் கட்ட நாட்களில் தொடர்ந்த மோதலின் இடையே சிக்கியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து தெளிவான தகவல்கள் எவையும் இல்லை.
இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதி கைப்பற்றப்பட்ட போது குறைந்தது 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என அங்கிருந்து எஞ்சியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அங்கு இருந்த மக்கள் பற்றியோ அல்லது கொல்லப்பட்ட காணாமல் போன காயம் அடைந்த படையினரால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் குறித்தோ உடனடியான கவனம் செலுத்தப்பட வேண்டும் என அங்கிருந்து வெளியேறிய பலரும் தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்த சாட்சியற்ற கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட இன்னும் கொலை செய்யப்பட உள்ள மக்களின் சடலங்களை அடையாளம் காணமுடியாது அழிப்பதற்கான துரித நடவடிக்கைகள் தற்போது படையினரால் செயற்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் வன்னியில் இருந்து வெளியேறியவர்கள் எஞ்சியிருப்பவர்கள் காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் இன்னும் படையினரால் இரகசியமாகக் தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் என அனைவரையும் கணக்கெடுக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க சர்வதேச அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் உடனடியாகவே சுயாதின அமைப்புகுக்கள் மனித உரிமை அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் இந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இறுதியாக முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய அரசாங்க அதிகாரிகள், மற்றும் வைத்தியர்கள் ஆகியோர் விடுவிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து உண்மைத் தகவல்களை மனித உரிமைகள் அமைப்புக்கள் சுயாதீன அமைப்புக்கள் பெற்றுக் கொள்ள வளியேற்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
Tuesday 19 May 2009
வருண் என்னும் சிங்கள காடையனை அடித்து துரத்துங்கள்
வெத்து வேட்டு, பீளிச்சிங் பவுடர் போன்ற சிங்கள காடைகளும் இங்கே உலா வருகின்றன. கவனம்.
Monday 18 May 2009
ராசபக்சேக்கு தூக்கு தண்டனை கிடைக்குமா?
Sunday 17 May 2009
ஒரு சில விசமிகள் தேவையற்ற அவதூறான பரப்புரை
ஒரு சில விசமிகள் தேவையற்ற அவதூறான பரப்புரையில் கிளம்பியுள்ளனர். தமிழ் மக்களுக்குக் காலங்காலமாக துரோகம் செய்து வருகின்ற ஒரு சில ஒட்டுப்படைக்கும்பல்கள் அரசுடன் இணைந்து கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் உடலை கைப்பற்றியிருப்பதாகவும் அவரது உடலம் கொழும்பிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பல பொய்யான தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்திய அரசிற்குச் சார்பான ஒரு சில ஊடகங்கள் இச்செய்தியை மிகைப்படுத்தி எழுதுவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்களும் தெரிவிக்கின்றன. ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் இன்னும் போர்ப்பிரதேசங்களில் உள்ளனர். அவர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதே சிங்கள அரசின் திட்டம். வன்னித் தகவல்களின் படி இதுவரை 25000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் கடும் சமர் நடந்து வருவதாகவும் தெரியவருகின்றது.
மேலும் இலங்கைத் தமிழர் பாதுகதப்பு இயக்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டள்ளதாவது:
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலத்தை மறைப்பதற்காகவே இலங்கை இனவெறி அரசு இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்பிவருகின்றது. இப்படியான பொய்ப் பரப்புரைகளை தயவுசெய்து யாரும் நம்பவேண்டாம். மக்களைக்காப்பாற்ற தலைவரின் நேரடி வழிகாட்டலின் கீழ் அனைத்து முன்னணித் தளபதிகளும் களத்தில் நின்று முனைப்புடன் போராடி வருகின்றனர்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலத்தை மறைப்பதற்காகவே இலங்கை இனவெறி அரசு இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்பிவருகின்றது. இப்படியான பொய்ப் பரப்புரைகளை தயவுசெய்து யாரும் நம்பவேண்டாம். மக்களைக்காப்பாற்ற தலைவரின் நேரடி வழிகாட்டலின் கீழ் அனைத்து முன்னணித் தளபதிகளும் களத்தில் நின்று முனைப்புடன் போராடி வருகின்றனர்.
சாவின் விளிம்பில் நிற்கும் மக்களைக் காப்பாற்ற இந்தக் கட்டத்திலாவது அனைத்துலகமும் ஐநாவும் முன்வர வேண்டும் என அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.
http://www.tamilseythi.com/tamileelam/parappurai_170509.html
Saturday 16 May 2009
ஏன்? இதற்கு முன்னர் 40 சீட் எடுத்தவர்கள் 12 தொகுதிகளில் மண்ணை கவ்வியது
மேலும் அதிகாரம், பணம், போலீஸ், ரௌடியிசம் போன்றவற்றின் கூட்டு சர்வாதிகாரத்திற்கு கிடைத்த வெற்றியே இது.
பொய்யான வெற்றியே விட, உண்மையான தோல்வி சிறந்தது.
Thursday 14 May 2009
மகனுக்காக தந்தை இடமாற்றம், மாநிலத்தில் முதலாவதாக வந்தார்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்த தேர்ச்சி விகிதம் 83 சதவீதமாகும். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, இலஞ்சியை சேர்ந்த மாணவர் ரமேஷ் தமிழை முதல் பாடமாக கொண்டு தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். குளறுபடி இல்லாத தேர்வு, எளிதான வினாத்தாள்கள், பதட்டம் இல்லாமல் தேர்வெழுதுவதற்காக கூடுதலாக 15 நிமிடம் வழங்கியது போன்ற காரணங்களால் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1.4 % குறைந்துள்ளது .
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆறரை லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துவந்த தேர்வு முடிவு, இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்வதற்கு, பிளஸ் 2 முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயம் இருப்பதால், மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
முதலிடம் பிடித்த மாணவர் ரமேஷ் பேட்டி : பொழுதுபோக்கு விஷயங்களை ஒதுக்கிவைத்து விட்டு படித்ததால் மாநில முதலிடம் பெற முடிந்தது என இலஞ்சி மாணவர் ரமேஷ் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். அங்குள்ள சர்வோதய சங்கத்தில் மேலாளராக பணிபுரிகிறார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவரது மகன் ரமேஷ், பிளஸ் 2 தேர்வில் 1183 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தில் தேறியுள்ளார். குற்றாலம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் படித்த இவர் தமிழில் 195, ஆங்கிலத்தில் 189, இயற்பியல், உயிரியல், கணிதம் ஆகியவற்றில் 200 மதிப்பெண்களும் வேதியியலில் 199 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இவர் பத்தாம் வகுப்பு தேர்விலும் மாவட்ட அளவில் இரண்டாம் இடம்பெற்றுள்ளார். தமது வெற்றி குறித்து மாணவர் கூறுகையில், சுமாரானதுதான் எங்கள் குடும்பம். அம்மா ஜெயலட்சுமி இல்லத்தரசி. எனது மூத்த சகோதரிகள் செண்பகாதேவி பி.இ.,படிப்பும், மகேஸ்வரி ஆசிரியை பயிற்சியும் படித்துள்ளனர். எங்கள் பள்ளி முதல்வர் காந்திமதி, தாளாளர் மோகனகிருஷ்ணன், ஆசிரியர்களின் ஊக்கம்தான் இத்தகைய வெற்றிக்கு காரணம். நான் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது என் பெற்றோரின் கனவு. என்படிப்பிற்காக புளியங்குடியில் இருந்து குடிபெயர்ந்து குற்றாலம் மேலகரத்தில் வாடகை வீட்டில் குடியேறினோம்.என் தந்தைதான் தினமும் வேலைக்கு புளியங்குடிசென்றுவந்தார். எனக்காக என் தந்தை சிரமப்படுவதை பார்த்து பெற்றோரின் கனவான மாநில ரேங்க் பெற வேண்டும் என ஆசைப்பட்டு படித்தேன்.
எனக்கு பயாலஜிதான் சிரமமாக இருந்தது. எனவே அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து தினமும் அதிகாலையில் எழுந்து படிப்பேன். எங்கள் வகுப்பில் அன்றைய பாடங்களை அன்றே தெளிவாக புரிந்துகொண்டுபடித்துவிடுவோம். அடிக்கடி தேர்வுகள் எழுதுவோம். இரவு அதிகபட்சம் 10.30 மணிவரைதான் படிப்பேன். படிப்பிற்காக டியூசன் செல்லவில்லை. வீட்டில் டிவியோ கேபிள்டிவி கனெக்சனோ கிடையாது. புத்தகம் வாசிப்பதிலும், கீபோர்டு இசைப்பதிலும் ஆர்வம் உண்டு. இருப்பினும் படிப்பிற்காக அவற்றையும் ஒதுக்கிவைத்திருந்தேன். டாக்டராக ஆசை. குறிப்பாக "ஸ்டெம்செல்' எனப்படும் மருத்துவ துறையில் உயர்கல்வி பயில ஆர்வமாக உள்ளேன். சென்னை மருத்துவகல்லூரியில் சேர்ந்து பயில்வேன் என்றார்.
Wednesday 13 May 2009
மீண்டும் குழம்பி போன சசிக்கு அனானியின் நறுக்
தற்போது வன்னியிலுள்ள சூழல் ஒப்பிட முடியாததாயினும், வன்னியில் வாழ்ந்து, குண்டு மழைகளிலிருந்து தப்பி வந்தவர்களில் நானும் ஒருவர். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் எல்லாவற்றையும் அனுபவித்த உரிமையில் இதை எழுதத் தோன்றியது.
எத்தனையோ சிங்கள நண்பர்களும் இருந்தனர் (இருக்கிறார்கள் என்று சொல்ல தற்போதைய மனநிலை இடம் கொடுக்கவில்லை). எத்தனையோ நல்ல மனம் படைத்த அந்த சிங்கள நண்பர்களே, தற்போது கொல்லப்படும் அப்பாவித் தமிழர்கள்பற்றிய எந்த கவலையும் இல்லாமல், போர் அவசியமானதுதான் என்று சொல்லும்போது எல்லாமே வெறுத்துப் போகின்றது. இனிமேல் அவர்களுடன் சேர்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்ற எண்ணத்தை கொடுக்கிறது. அரசியல்ரீதியாக நேரடியாக இலங்கை அரசாங்கத்திடம் கேட்டு, அவர்கள் எதையும் தூக்கிக் கொடுக்கப் போவதுமில்லை.
'போதுமடா போராட்டம் என்கின்றீர்கள்', இது போராடும் எண்ணம் உள்ளவர்களையும் சோர்ந்து போகச் செய்யும். அதன் விழைவு 'இலங்கையில் தமிழினம் என்று ஒன்று இருந்தது' என்று வரலாறில் மட்டுமே படிக்க வேண்டிய நிலமைதான் வரும். அப்படி வரலாற்றில் பதிவு செய்ய சிங்களவர்கள் அனுமதிப்பார்களா என்பதே தெரியாது. ஏற்கனவே வரலாற்றை மாற்றி வைத்திருக்கிறார்கள்.
உயிர் வாழ்ந்தால் மட்டும் போதும், அடிமையாகவே இருந்து விடலாம் என்று எண்ணினாலோ, அல்லது ஈழம் என்ற பெயரே அழிந்து ஒழிந்து விடலாம் என்று எண்ணினாலோ மட்டுமே, ஈழப் போராட்டாம் வேண்டாம் என்ற முடிவுக்கு வரலாம்.
ஏனென்றால், உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களையும் இப்படி எழ்த்துக்கள் சோர்வடையச் செய்து விடலாம். அதனாலே சொல்கின்றேன்.
வன்னியை விட்டு வெளியேறியவர்கள், வெளியேற்றப்ப்பட்டவர்கள், தற்போது எப்படி வாழ்க்கை வாழ்கின்றார்கள்? பொலநறுவையிலிருந்து வந்திருந்த படங்கள் பார்த்த அதிர்ச்சியே இன்னும் தீரவில்லை. உண்மையைச் சொன்னால் அழக்கூட முடியவில்லை. கண்ணீர் வற்றி விட்டது. நீங்களும் அந்தப் படத்தை பார்த்திருக்கக்கூடும். வன்னி மக்களிடம் கேட்க வேண்டும் என்றால், அவர்களுக்கு அடுத்த பக்கத்திலுள்ள பயங்கரம் புரியாமலும் இருக்கலாம். எங்கேயும் இருக்க முடியாமல் தவிக்கும் மக்களை நினைத்தால்.....
ஏதோ உங்களுக்கு தெளிவான ஒரு பின்னூட்டம் எழுதும் எண்ணத்தில்தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் எண்ணங்கள் முட்டி மோதி, உடைந்து சிதறிப் போகின்றது.
ஒன்றே ஒன்று உங்களிடம் சொல்ல வேண்டும். பலரையும் சென்றடையும் கருத்துக்களை எழுதிவரும் நீங்களெல்லாம், இப்படி தயவு செய்து, ஏற்கனவே சூழ்நிலையால் சோர்ந்திருப்பவர்களை, மேலும் சோர்வடையச் செய்து விடாதீர்கள்.
/*
இப்போது இவரது பின்னூட்டங்களில் முண்ணனி வகிப்பது சிங்கள் காடைகளும், குடுமிகளுமே ஒரு மடையன் குடுமி சீமானையே பத்தி கேவலமாக பேசியது, வெத்து வேட்டு என்ற சிங்கள காடை தமிழின துரோக வேலைகளை பலகாலமாக செய்து வருகிறது, இவர்கள் எல்லாம் இப்போது சசியின் நண்பர்கள்.
*/
Tuesday 12 May 2009
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான பெரியார் தி.க.வின் குறுவட்டுக்களை ஒளிபரப்ப நீதிமன்றம் அனுமதி
இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டுக்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை குறித்தும் அதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் துணை போவதை விளக்கியும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் குறுவட்டு ஒன்று தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த குறுவட்டை வெளியிடக்கூடாது என்று காவல்துறையினர் தடை விதித்தனர்.
இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சி.பி.செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சோதிமணி, சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குறுவட்டுக்களை தயாரிக்கும்போது, அதில் அதை தயாரித்தவர் மற்றும் வெளியிடுவோரின் பெயர் இடம்பெற வேண்டும்.
அவ்வாறு இருந்தால் அதை வெளியிட எந்தத் தடையும் இல்லை. எனவே இலங்கை இனப்பிரச்சினை குறித்த குறுவட்டை வெளியிட அனுமதியளிக்க வேண்டும் என்று செந்தில்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குறுவட்டை வெளியிட அனுமதியளித்தனர். இந்த தீர்ப்பை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள்
வரவேற்றிருக்கின்றனர்.
இதேவேளையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 9:00 மணிக்கு பின்னர் திடீரென மின்தடையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது.
பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டை ஒளிபரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து அந்த குறுவட்டு 'மக்கள்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இதனை பொதுமக்கள் பார்ப்பதைத் தடுப்பதற்காக சென்னை இராயபுரம், புரசைவாக்கம், பெரம்பூர் உட்பட வட சென்னை முழுவதும் இன்று இரவு 9:00 மணிக்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை நீடித்தது.
மாநில காவல்துறையால் தடை செய்யப்பட்டிருந்த இந்த குறுவட்டு இன்று 'மக்கள்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பு முடிந்ததும் மின்தடையும் நீங்கிவிட்டது.
காங்கிரஸ் சூரர்களும் வீசப்படாத செருப்புகளும்
கொல்லப்படுபவர்கள் எல்லாம் புலிகள் பொது மக்கள் அல்ல என்றுதான் காங்கிரஸ்காரன் சொல்கிறான். ஆனால் இந்தியாவின் துணையோடு ஈழத்து மக்களை மட்டுமல்ல புலிகளைக் கொன்றாலும் அது இனப்படுகொலையே என்பதுதான் தமிழக மக்களின் உணர்வு. நாம் அதைத்தான் பேசுகிறோம். மக்களின் கொலைகளுக்காக புலிகளை அழித்தொழிப்பதற்காக, இன்றைக்கு தமிழகத்தில் போர் நடக்கிறது. அங்கே ராஜபட்சே தமிழ் மக்களைக் கொல்கிறான் என்று சொன்னாலே அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. அப்படித்தான் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பேசுகிறார்கள். அதனால் அவர்கள் மீது இத்தனை ஒடுக்குமுறை. நள்ளிரவில் புகுந்து பெண்களை ஆபாச வசவுகளால் திட்டி அடித்து உதைத்து இழுத்துச் சென்று சிறையில் தள்ளியிருக்கிறார் கருணாநிதி. இந்தியாவின் வேறு எந்த மாநில முதல்வரும் செய்யாத ஒரே சாதனை தள்ளுவண்டியில் வந்ததுதான். இவர் தன் உடல் பலவீனத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார். தனக்கு வாக்களித்த மக்களை செயல்படா முதல்வராக இருந்து மோசடி செய்கிறார். ஆனால் கொடிய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு தங்களின் அரசியல் எதிர்ப்பாளர்களை ஈவிரக்கமற்ற முறையில் சட்டத்திற்குப் புறம்பாக தண்டித்து வரும் கருணாநிதியின் மீது சிறிதளவேனும் கருணை காட்ட இடமில்லாமல் போய் விட்டது.
ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் திமுக மீது தோன்றியுள்ள வெறுப்பை தேர்தலில் அறுவடை செய்யப் போகும் அதிமுகவோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையோ இந்தக் கைதுகளுக்காகவும் வழக்கம் போல் குரல் கொடுக்கவில்லை. சீமான் கைது செய்யப்பட்டபோது இவர்கள் என்ன விதமான மௌனம் காத்தார்களோ அதே மௌனத்தை இப்போதும் காக்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இன்றைய போராட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஈழத்துக்காக நாங்கள் போராட மாட்டோம். ஆனால் ஓட்டு மட்டும் பொறுக்கி பதவி அரசியலுக்கு வருவோம் என்று நினைக்கிற ஜெயலலிதாவையும் கண்டு நாளை ஏமாறப் போவது தமிழினம். அதுதான் கருணாநியின் பலம்.
இன்றைக்கு சில நண்பர்கள் இலங்கைப் போரில் இந்திய காங்கிரஸ் கட்சிதான் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது. அதில் மாநில திமுகவிற்கு ஒரு பங்கும் இல்லை என்பது போல பேசி வருகிறார்கள். இலங்கை இனப்படுகொலையில் மத்திய அரசின் பங்கையும் மாநில அரசின் செயல்படா தன்மையின் துரோகத்தையும் தோலுரிக்கும் பெரியார் திக தோழர்களுக்கு மட்டும் கடும் தண்டனை. விளைவு கொதிப்பு உயர்ந்து இன்று தமிழகம் முழுக்க காங்கிரஸ் திமுக வேட்பாளர்களுக்கு மக்களிடமே கடும் எதிர்ப்பு இருக்கிறது. பல இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஊருக்குள் நுழைய விடாமல் மக்கள் தடுக்க அவர்களுக்காக வக்காலத்து வாங்கச் சென்றது விடுதலைச் சிறுத்தைகள். திமுக கூட்டணியில் இன்று இருக்கும் ஒரே ஆறுதல் திருமாவளவன் மட்டும்தான். ஆனால் இயல்பான மக்கள் எதிர்ப்பு ஒரு பக்கம் என்றால் தங்களுக்கு எதிராக யாரும் தேர்தல் வேலை பார்க்கக் கூடாது யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்கிற அடக்குமுறையின் உச்ச வடிவமாக இந்த தேர்தல் மாறியிருக்கிறது.
சிவகங்கையில் ப. சிதம்பரத்தை எதிர்த்து ஈழ ஆதரவாளர் ராஜீவ்காந்தி போட்டியிடுகிறார். சிதம்பரமும் அவரது வாரிசு கார்த்திக் சிதம்பரமும் அவரது அல்லக்கை அடியாட்களும் வேட்பாளர் ராஜீவ்காந்தியையும் அவருக்கு ஆதரவாக பணியாற்றும் நண்பர்களையும் அன்றாடம் துரத்தித் துரத்தி தாக்குகிறார்கள். தேர்தல் முடியும் வரை அவர்களை சிறையிலடைக்க முயற்ச்சிக்கிறார்கள். அதாவது எவனும் தங்களுக்கு எதிராக வேலை செய்யக் கூடாது பேசக் கூடாது என்றால் எதற்குத்தான் ஓட்டுப் பொறுக்க வேண்டும்? பேசாமல் காங்கிரஸ் வேட்பாளரெல்லாம் வெற்றி என்று அறிவித்து விட்டுப் போக வேண்டியதுதானே!
உண்மையில் இன்று தமிழர்களைப் பார்த்து ஒவ்வொரு காங்கிரஸ்காரனும் அஞ்சி நடுங்கும் சூழலுக்கு வந்திருக்கிறான். எப்படி என்றால் சோனியாகாந்தியின் வருகைக்காக சென்னை தீவுத் திடலில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டதல்லவா? அதில் சோனியா நிற்கும் மேடைக்கும் பார்வையாளர்கள் அமரும் தூரத்தையும் எப்படி அளவிட்டார்கள் தெரியுமா? பந்தல் அமைக்கும் தொழிலாளர்கள் சிலரை அழைத்து ஒவ்வொருவரையும் பல கோணங்களில் நிறுத்தி செருப்பை சோனியாகாந்தி, கருணாநிதி நிற்கும் இடத்தை நோக்கி வீச வைத்து அந்த தூரத்தை அளந்து அதன்படியே மேடை அமைக்கப்பட்டதாம்.
தங்கள் மீது செருப்பு வீசப்படும் என்று பயப்படுகிறவர்கள் அதற்கு தங்களை தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்து தொலைக்க வேண்டியதுதானே? ஆனால் அப்படி அல்ல. வயலார் ரவியும், குலாம் நபி ஆசாத்தும், வீரப்ப மொய்லியும் தமிழ் மக்களை கேணப்பயல்களாக நினைக்கிறார்கள். ஆனால் செருப்பை வீசி அளவை எடுத்தது மட்டும்தான் தமிழர்களுக்கு கிடைத்துள்ள தக்க மரியாதை. இதைத் தொடர்ந்து பேணுவதன் மூலமே தமிழகம் இந்தியாவின் ஏனைய சமூகங்களை விட தலை நிமிர்ந்து வாழ முடியும். காங்கிரஸ் கட்சிக்கு முடிவு கட்டுவோம். தோழர்கள் மீதான ஒடுக்குமுறைக்காக குரல் கொடுப்போம்.
- பொன்னிலா (judyponnila@gmail.com)
http://www.keetru.com/literature/essays/ponnila_9.php
Monday 11 May 2009
பிரபாகரனுக்கு கடைசிவரை விசுவாசமாக இருந்து செத்துப்போடா: சீமானிடம் தந்தை
இப்பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமான், ’’இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு 70நாட்கள் புதுச்சேரி சிறையில் இருந்தேன்.
அப்போது ஒரு நாணயம் போட்டு போன் பேசுவதற்கு அனுமதி இருப்பதால் என் அப்பாவுக்கு போன் போட்டேன். உன் அண்ணனுக்கு(பிரபாகரன்) கடைசிவரை விசுவாசமாக இருந்து செத்துப்போடா என்று சொல்லி என் இனமான தமிழ் உணர்வுக்கு மேலும் உரமிட்டார்’’ என்று பேசினார்.
திமுக,காங்கிரஸ்,மகிந்த கூட்டணி இணைந்து 2000 தமிழரை பலி வாங்கினார்கள்
வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் பெருமளவு பொதுமக்களும் தங்கியுள்ளனர். அங்கு கடந்த இரு நாட்களாக இலங்கை ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பொதுமக்களில் சுமார் 2000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கு தற்காலிகமாக செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் வி. சண்முகராஜா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பதுங்குக்குழிகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அதே இடத்திலேயே எரிக்கப்பட்டதாகவும், காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே இத்தாக்குதலை 'ரத்தக்குளியல்' என்று குறிப்பிட்டுள்ள ஐநா, இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கை போர் குறித்து ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விவாதிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகம், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும, இலங்கைக்கு நிதியுதவி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் இதற்கான முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.